ADS

Tuesday, 9 July 2019

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்

குறளின் குரல் !
*********
" ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் "

பொருள் -
*********
அறிவுடையவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, இருக்கின்ற முதலை இழந்து விடும் காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள், என்று, செயல்படுபவர்கள் புத்திசாலித்தனமான முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார், தெய்வப் புலவர் நம் திருவள்ளுவர்.

' இருக்கிறத  விட்டுட்டுப் பறக்கறதுக்கு ஆசைப் படக் கூடாது '

' லாபம் அதிகமாகக் கிடைக்கிறதே என்பதற்காக விதை நெல்லை விற்பவன் முட்டாள் '

' தினமும் ஒரு பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தால் அதிக முட்டைகளை உடனே அடையலாமே ' என்று ஆசைப்பட்டு, உள்ளதையும் இழந்தவன் கதையெல்லாம் நமக்குத் தெரியும் !

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

ஆசைக்கு முன்னுரிமை கொடுத்தால் அறிவு மங்கிவிடும், என்பதுதானே !

சுலபமாகப் பணம் சம்பாதிக்க என்ன வழி ?

ஒருவன் செய்திப் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தான்..
இவ்வாறு !

' நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா ? எனது முகவரிக்கு ஒரு ரூபாய் மணியார்டர் அனுப்பி வையுங்கள். அந்த இரகசியத்தைக் கூறுகிறேன் ' இதுதான் அந்த விளம்பரம்.
அவ்வளவுதான் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற பேராசையில் பணம் அனுப்பி வைத்தார்கள் !

இரண்டு நாட்கள் கழித்து அதே பத்திரிக்கையில் மற்றுமொரு விளம்பரம்..
' அன்பர்களே.. என் விளம்பரத்தைப் பார்த்து ஒரு கோடி பேர் எனக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைத்தார்கள். நான் இப்பொழுது கோடீஸ்வரன் ஆகி விட்டேன். இது தான் அந்த ரகசியம் ' என்று அந்த விளம்பரம்  இருந்ததாம்.
இது எப்படி இருக்கு ?

இந்தக் கதை அனைவருக்கும் தெரியும் என்றாலும்...
தெரிந்தும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைக்கும் ஆசையில் இருந்து இன்னும் யாரும் விடுபட வில்லையே ?

நாளைக்குக் கிடைக்கும் பிரியாணியை விட,  பசிக்கும் போதே கிடைக்கும் பழைய சோறு அமிழ்தமல்லவா ?

இந்த,
ஞானக்கண் திறக்க வேண்டும். இந் நாநிலத்தில் மனிதர்க்கெல்லாம்.. அறிவில்,
ஊனக்கண் படைத்தோரெல்லாம் உண்மையை உணர்ந்து நாளும் உள்ளத்தில் தெளிதல்
வேண்டும்.
கூன், குருடு, செவிடு நீங்கிய குறையில்லா பிறப்பே, நமக்கு இறைவன் கொடுத்த பெரிய லாபம் !
வான் புகழும்  வள்ளுவன் குறளால் அறிவில் வலிமை பெற்று உயர்ந்து வாழ்ந்து, வளமை பெற்றால் அதுவே போதும் !

நானும் கவிதை எழுதிப் பார்த்தேன்...

நன்றாயிருக்கிறதோ... இல்லையோ...?

நல்ல கருத்துக்களை உங்கள் உள்ளத்தில் சேர்த்தேன் !

அந்த மகிழ்ச்சியோடு...
இனிய காலை வணக்கம், நண்பர்களே !

மதுரை G.பாலு.
24-06-2019
திங்கட்கிழமை.

No comments:

Post a Comment